Search This Blog

Wednesday 13 March 2013

காய்ந்து உயிருடன் கருவாடு ஆகுவது எம்மினத்தில் தான்...!!!



ஆனந்தமான அகிலத்தில் 
ஆவலாய் எதிர்பார்த்திடுவோம்..! 
ஆண்டிற்கொருமுறை மெல்ல 
ஆடி வரும்  கார்த்திகையில் 
ஆடைகளை களைந்து நீராட...

சோப்பு இல்லை சீப்பு இல்லை 
சோம்பல் முறித்து புதுப்பெண்ணை ஒத்து 
சோக்காய் காட்சி கொடுப்போம்...!!! 

வருடம் பூரா பிச்சை எடுத்தாலும் 
வன்னி மண்ணில் பட்டினி கிடந்தாலும் 
வவுனியாவில் கொஞ்சம் தண்ணி கிடைச்சாலும் 
வருடத்துக்கொருமுறை மலரும்  கார்த்திகையில் - எம் 
வம்சம் எல்லாம் ஒரு முறை  தலை நிமிர்ந்திடும்...!!!

உலகத்தின் வித விதமான வண்டிகளின் அழகும் 
உல்லாசமாய் ஒய்யாரமாய் ஏசியில் நெளியும் உயிரும் 
பனங்கிழங்கை போன்று அடுக்கிய நெரிசலிலும் நெளியும் உயிரும் 
பரிதாபமாய் சக்தி அற்று உழக்கி உழக்கி கடக்கும் உயிரும் 
பட்டினியால் நாவரள  காய்ந்து கிடக்கும் எம்மை உற்று நோக்குவதில்லை 

அவ்வப்போது சிதறும் வாகனங்களின் எச்சங்களும் 
அநாதை உடமைகளும் எம்மை பதம்பார்ப்பதுண்டு...!!! 
அநியாயமாய் பீறிடும் உதிரங்களும் எண்ணெய்களும் 
அடிக்கடி எம்மேல் தெளிக்கப்பட்டாலும் - எம் 
அகோரப்பசிக்கு உணவாகிட முடியாதே...!!! 

காலத்திற்கும் எம்மை நோக்கி 
கால்நடைகளும்  நாக்கினை எட்டியது இல்லை 
காய்ந்து உயிருடன் கருவாடு ஆகுவது எம்மினத்தில் தான்...!!!
 
யாருக்கேனும் எம்மால் பயனுமில்லை 
யாருக்கேனும் எம்மீது பரிதாபமும் இல்லை
யாசிக்கின்றோம்  மனிதர்களே உங்களில் 
யாராவது எம்மை கூண்டோடு அழித்து உதவ முடியுமா???
  
இப்படிக்கு 
 
வாகனங்களின் ஓயாத நடையால் 
வாரி இறைக்கப்பட்ட புழுதிகளுக்குள் 
ஒளிந்திருக்கும் (புழுதிகளை ஆடையாய் போர்த்தி மூடி இருக்கும் )
"ஓயாத வீதியின் இரு மருங்கு செடி கொடிகள்"

Friday 15 February 2013

காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா..??


"காதலர் தினம், காதலர் தினம்" என்று முகப்புத்தகத்தில் பேசாத முகங்கள் இல்லை. ஒரு வழியாக காதலர் தின ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நிறைவடைந்து விட்டது. வழமையாக இந்த காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி மகிழ்வதைத்தான் நான் பார்த்திருக்கின்றேன். அதுவும் நம் ஊரில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து மறைத்து காதலர் தின வாழ்த்து அட்டைகள்பரிசு பொருட்களை கொள்வனவு செய்து தம் அன்புக்குரியவர்களிடம் சேர்த்து ஒரு திண்டாட்டத்துடன் காதலர்தின கொண்டாட்டம் கொண்டாடும் காதலர்கள் தொடங்கி தம்மை மறந்து  எல்லோர் முன்னிலையிலும் தம் காதலை கொண்டாடும் காதலர்கள் வரை நிறைய காதலர் தினங்களை கண்ணுற்ற எனக்கு இந்த ஆண்டு காதலர் தின அனுபவம் மிக்க வித்தியாசமான அனுபவம் என்பதை விட காதலர்தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல என்பதையும் புரிய வைத்தது என்றும் கூட கூறலாம்.
ஆம். தாய்லாந்தில் காதலர்தின கொண்டாட்டங்கள் காதல் செய்யும் அனைத்து பராயத்தினராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இரு நாட்களுக்கு முன்பு வீதியெங்கும் சிவப்பு மயமாகவே காணப்பட்டது. சிவப்பு இதய பொம்மைகளும், சிவப்பு ரோஜாக்களும், சிவப்பு நிற பரிசுப்பொதிகளும் கண்ணை பறித்தன. ஆனால் இவற்றை சின்னஞ் சிறு சிறார்கள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதை மிக்க ஆச்சரியமாய் பார்த்த எனக்கு நேற்றைய தினம் அதாவது காதலர்தினத்தன்று இங்கு உள்ள ஒரு சிறுவர் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பள்ளிச்சிறுவர்கள் அனைவரும் தம் சீருடையிலும் அழகிய அவர்களின் கன்னங்களிலும்  இதய வடிவிலான ஸ்டிக்கர்களை  ஒட்டி இருந்ததுடன் தமது கைகளில் பரிசு பொதிகளுடன் காணப்பட்டனர். வியப்போடு அவர்களை நோக்கிய நான் எமது ஊரில் மட்டும் இப்படி பாடசாலைக்கு போனால் என்ன கதிஎன்று மனதுக்குள் எண்ணியவாறு அந்த பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புக்களை இரசித்துக்கொண்டிருந்தேன்.

 காலை ஆராதனைக்காக ஒன்று கூடிய அவர்கள் தேசிய கீதம் இசைத்து முடிந்ததும் ஒரே குரலில் ஹப்பி வலன்டைன் டே என்று கத்தியதில் பள்ளியே அதிர்ந்தது. அதன் பின் ஒவ்வொருவராய் தம் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி தம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.ஆசிரியர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு இனிப்புக்களை வழங்கி கட்டியணைத்து தம் அன்பினை பரிமாறிக்கொண்டனர். சிலர் அன்பு என்னும் தலைப்பில் கவிதைகள் படித்தனர். ஆசிரியர்களும் சிலர் உரை ஆற்றி அன்பை போற்றினர்.   கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் தம் அன்பினை பகிர்ந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த அவர்களால்  அந்த பாடசாலை புது மெருகோடு காணப்பட்டது .ஆக மொத்தம் அன்புக்குரியவர்களை திக்கு முக்காட வைத்து கொண்டிருந்த அந்த சின்னஞ் சிறுசுகள் பார்த்து கொண்டிருந்த என்னையும் திக்கு முக்காட வைத்தனர். 

காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பது நானறிந்த உண்மை எனினும். பெப்ரவரி 14 என்பது காதலர்களுக்கானது என்ற என் நினைப்பை நேற்றைய காதலர் தினம் பொய்யாக்கியது. அது காதலர்களுக்கான தினம் அல்ல காதலிப்பவர்களுக்கான தினம். ஆம் பெற்றோரை காதலிக்கும் குழந்தைகளும் ஆசிரியர்களை  காதலிக்கும் மாணவர்களும் அயலவர்களை நண்பர்களை என்று அனைத்து உறவுகளையும் நேசிக்கும் அன்பு உள்ளங்கள் தம் தூய  அன்பினை வெளிப்படுத்தும் நாளாகவே தாய்லாந்து மக்கள் இந்த காதல் தினத்தினை கொண்டாடுகின்றனர்.


உண்மையில் சிந்தித்து பார்த்தால் வலன்டைன்  தினம் என்று தானே அழைக்கின்றார்கள். இரு காதலர்களின் மேல் உள்ள அன்பினால் அவர்களை காப்பாற்றி அவர்களுக்காக உயிர் கொடுத்த வலன்டைன் பாதிரியாரின் பெயரால் அவரின் நினைவாக இந்த தினம் கொண்டாட படுகின்றதென்றால் அது நிச்சயமாக அந்த பாதிரியார் உயர்வாக போற்றிய அன்பினை வெளிக்காட்டவே அன்றி வேறு எதற்கு..?? 


தமிழில் நாம் தான் காதலர் தினம் என்கின்றோம்?? உண்மையில் காதலர்களுக்குரிய தினம் என்றால் ஆங்கிலத்தில் லவர்ஸ் தினம் என்றல்லவா அழைக்க வேண்டும்?? ஏன் வலன்டைன் தினம் என்கின்றார்கள்..?? சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தி இரு யிர்களை காப்பாற்றி உயிர் துறந்த பாதிரியார் வழியில் எல்லோரிடமும் அன்பு செலுத்தி மகிழ வேண்டும்  என்று இந்த தினத்தினை நாம் ஏன் கருதக் கூடாது?? காதலர்கள் மட்டுந்தான் காதலிக்கின்றார்களா??  

உறவுகளை, பெரியோரை, சக மனிதர்களை, அயலவர்களை என்று வேற்றுமை இன்றி எல்லோரிடமும் அன்பு செலுத்தி மகிழ்ந்தால் குறைந்து தான் போய்  விடுவோமா? சரி, அதற்காக பத்து வருசமா முட்டி மோதிட்டு இருக்கிற பக்கத்து வீட்டு காரனுக்கு அன்பை காட்டுகின்றேன் பேர்வழி என்று போய்  இனிப்பை கொடுத்து அவனை களி தின்ன வைத்து விடாதீர்கள்.

உம் என்று முகத்தை வைத்து கொண்டு எம்மில் பலர் இருக்கின்றார்கள். காலை  வேலைக்கு போனோமா மாலை வீடு வந்தோமா என்று தமக்கு தாமே பேசிக் கொண்டு இருக்கும் அவர்கள் இந்த ஒரு நாளிலாவது கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் இனிப்பாய் இருந்தால் தான் என்ன?இந்த ஒரு நாளை முன்னுதாரணமாய் கொண்டு வாழ்க்கை முழுக்க எல்லோரிடமும் அன்பாயிருங்கள் எல்லோரையும் காதலியுங்கள் காதலித்துக்  கொண்டே இருங்கள்...!!!(தப்பா ஏதும் புரிந்து கொள்ளாதீங்கோள் மக்காள் )

நன்றி தாய்லாந்து குழந்தைகளுக்கு...

என்றும் அன்புடன் 
அரசி  

Thursday 14 February 2013

முத்தி நிலை அடைந்தாலும் முற்றுப்பெறாது இந்த காதல்...!!!




முன்னிரவுகளில்
முகம் பொத்தி விம்மி அழுத நினைவுகள்...!
முகமூடி போர்வைக்குள்ளே 
முடங்கி வாழ்ந்த பலாத்கார கொடிய வாழ்வு...!

முகப்புத்தகத்திலும் என்னை 
முடக்கி வைத்திருந்த உன் மனதை எண்ணி 
முள்ளாய் குத்திய  தருணங்கள்...!

முழுவதுமே முகவரி அற்று போய் விடுகின்றது...!!!
முதன்முதல் எம் காதலில் வந்த "காதலர் தினத்தில்"
முதன்முதலாய் நீ தொலைபேசியில் இட்ட 
முத்தச்சத்தம் காதுகளில் ஒலிக்கும் போது.....


முடிவாகிப்போனது நீயன்றி என் காதலல்ல...!!! 
முணு முணுத்து கொண்டே தான் இருக்கின்றது - என்னுள்  
முடங்கி போயிருக்கும் மெளனக்காதல்...!!!

முத்தி நிலை அடைந்தாலும் 
முற்றுப்பெறாது இந்த காதல்...!!!  
முடித்து சென்ற உனக்கு 
முடிவிலி பற்றி அறிந்திட தெரியாதே...!

முன் ஜென்ம பந்தமோ என்றாய்...!
முத்தே பவளமே வைரமே என்றாய்...!
முட்டாளே என்ற நீ இன்று - என் 
முகம் கூட மறந்திருப்பாய்...!!! 

காலங்கள் கடந்தாலும் 
காதல் கசங்கி போய் விடவில்லை...!
காதல் என்றுமே அழியாதது....!!!
காதலின் அடிப்படை அறிவற்ற உன்னை கொண்டு 
காதலை கணக்கிட முனைவது அறியாமை..! 

காதலன் என்ற தகுதி அற்ற - நீ 
கணவனாய் இன்னொரு புது பதவியை 
காசை கொடுத்தா இரந்தா பெற்றாய்??

காதலர் தினம் நினைவற்று போய்
கால் போன போக்கிலே - நீ 
காலி வீதியெங்கும் அலைவதாய் கேள்வி...!!!


காசை கொடுத்து உன்னை விலைக்கு வேண்டியவளுக்கு 
காட்டுகின்றாயோ விசுவாசம் என்று மனம் எண்ணினாலும் 
காலத்தால் காதல் சொல்லும் பழிவாங்கல் என்கின்றது அறிவு...!!! காலம் வரைக்கும் காதல் வாழத்தான் செய்கின்றது...!!! காதலுக்கு "உயிர்"  இருக்கத்தான் செய்கின்றது...!!!

அரசி  

Monday 4 February 2013

இங்கிலாந்தில் இங்கிலீசு இரண்டாம் மொழியாகி இருந்திருக்கும் ..!!!



மனித எச்சங்கள் மண்ணுக்குள்
மலிவாக கிடைக்கின்ற 
மகத்தான நாட்டில்  
சிங்களமும் புத்தமும் 
சிறுபான்மையை தின்கின்ற கொடுமை 
சிங்காரச்செந்தமிழ் படுகொலையாகும் அவலம் 
சிவனை துரத்தி புத்தன் தியானிக்கும் வன்மம் 
சிங்க(ள)த்து கொடியின் பறப்பின் பின்னே..!!!  


 

ஆயுதங்களை கண்டதும்
ஆகாயப்பறவைகள் எச்சங்களை துப்பியதும் 
ஆண்டவனின் இருப்பிடங்கள் 
அகதி முகாம்களாகியதும் 
ஆங்கிலேயனுக்கு பிற்பாடே...!!!




மண்ணுக்குள் இருந்து 
மண்டையோடுகள் முளைப்பதும் 
மண்ணை விற்று  
மக்களை ஏய்க்கும் குள்ளநரி மந்திரிமார் 
மாற்றானுக்கு குடை பிடிப்பதற்காய் 
மழை பெய்ய வைப்பதும் 
வெள்ளையனை கலைத்த பிற்பாடே..!!! 



கோலோச்சும் நாட்டு மக்களை 
கொன்றொழிக்க கொடுங்கோலர்,
கொத்து கொத்தாய் குண்டுகளையும்  
கொடிய நச்சு வாயுக்குண்டுகளையும் 
கொட்டிய கொலை வெறித்தனம்..!!
கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்ற 
சொல்லின் பிற்பாடே...?? 
ஆங்கில பிரபுக்களின் ஆட்சியில்  
ஆங்கிலமும் மேலைத்தேய கலாச்சாரமும் 
வெட்ட வெளிச்சமாய்  புகுத்தப்பட்டது 
ஆலயங்கள் இடிக்கப்பட்டது தான் 
வெள்ளையனின் ஆட்சியில் 
வெள்ளை வான் கடத்தல் இல்லை..!
வெட்டுப்புள்ளி விவகாரம் இல்லை..! 
விலை வாசி ஏற்றமும் இல்லை..! 

 
முள்ளுக்கம்பிக்குள் முடக்கப்பட்ட 
முதுகெலும்பு அற்ற வாழ்வு...!!!
அத்திவாரக் கல்லுக்கு பதில் 
அப்பாவித்தமிழனின் என்புக்கூடு..!! 
காணாமல் போனவன் 
மரண சான்று பெறுகின்றான் 
அகழ்வாராச்சியால்...!!

இலங்கையர் என்று ஒன்றுபட்டு 
இருவேடமிட்ட சிங்களவனை நம்பியதற்கு    
தனியே வெள்ளைத்துரைகளை 
தட்டி கேட்டிருந்தால் 
வெள்ளையனை வேட்டி  கட்ட வைத்திருப்பான் 
வெள்ளைத்தமிழன்...!!!
இங்கிலாந்தில் இங்கிலீசு 
இரண்டாம் மொழியாகி இருந்திருக்கும்..!!!

இருந்தவற்றை தொலைத்து ஆண்டியான
இளிச்சவாய் தமிழன் - இன்று 
இலங்கையில் ஏதோ கொண்டாடுகிறானாம்..!!! 
நடு வானில் பறப்பது சிங்க கொடியல்ல
நலிந்து போய்விட்ட தமிழனின் இயலாமை...!!!
சிங்களவன் கொண்டாடி மகிழ்வது 
வெள்ளையன் கொடுத்த விடுவிப்பை அல்ல
வீரத்தமிழனின் தற்காலிக வீழ்ச்சியை...!!!

நாற்பத்தேழுகளின் பின்னோக்கிய
நாட்களை விட மோசமான காலத்தை நோக்கி 
நகருகின்ற தமிழனுக்கு எதற்கு இந்த தினம்?

நன்றி கெட்ட மனித பச்சோந்திகள்..!
நரிபுத்தி கொண்டு சிங்களத்தை 
நக்கிப்பிழைக்கும் கட்டாக்காலிகள்- இவர்கள்   
நாளை புலி வாலும் பிடிப்பார்கள் ...!!! 

Thursday 15 November 2012

சுளை சுளையாய் சுமக்கின்ற துயருக்கு பெயர் தான் வாழ்க்கையா???


பசி மறந்தேன்..
பகல் இரவும் மறந்தேன்...
பக்கத்தில் நீ இல்லை என்பதையும் மறந்தேன்...!!!

நாளொரு இடுக்கண் பொழுதொரு சஞ்சலம் 
நாலா புறமும் இருள் கவிழ்ந்து 
நாதியற்ற அனாதையாய் நான் மட்டும்...!!! 

தூக்கம் என்பது விரும்பாத ஒன்றாகி - என்னை 
தூக்கிலிட்டு கொள்ளத்தான்  மனம் எத்தனிக்குதே...!!!
தூர தேசத்தில் இருக்கின்ற என் இதயம் 
தூண்டில்  மீனாய் தவிக்கின்றதே..!!!

நற்செய்தி இல்லை -  ஆனால் 
நிமிடத்திற்கொன்றாய் புதுப்புது வரவாக 
உள்ளத்தை உருக்குலைக்கும் துயரங்கள் 
உள் நுழைவதில் பஞ்சமில்லை..!!!

ஒரு தலை மேல் 
பல மலை போல் 
சுளை சுளையாய் 
சுமக்கின்ற துயருக்கு பெயர் தான் 
வாழ்க்கையா???

கசக்கின்ற வாழ்வை  சகித்து 
கரும்பாய் இனிக்கின்ற வாழ்வை  சிரித்து 
கடுஞ்சோதனை வாழ்வை சாதித்து வென்றிடலாம் 
கடந்து போக முடியா வாழ்வினை எதை கொண்டு வெல்வது ??

கனவிலும் சிரிப்பின்றி கண்ணீரே துணையாகி 
கல்லாகி போன கடந்த கால நினைவோடு..
கரும் இருளாகி போன நிகழ்காலத்தில் நின்று 
கரத்தில் ஒரு தீக்குச்சி இன்றி
கடந்து செல்ல முடியுமா எதிர்காலத்தை நோக்கி...??

Thursday 25 October 2012

உயிரை கசக்கி பிழிந்து உலர்த்தி சலவை செய்யும் உயிர் இயந்திரங்கள்...!!!


மனிதங்கள் மரத்து மரமான யுகத்தில்..
மரணத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒன்றாய் நானும்,
மனித வாசம் அற்ற இருட்டில் தனியாக நீயும்,
தவற விட்ட வாய்ப்பு ஒன்றால் 
தனியாக அந்நிய தேசமதில்....
தடைகளை தாண்டியும்,,,
தலை குப்புற விழுந்து எழுந்தும்,,,
தமிழனின் தலைவிதியிலிருந்து
தப்புமா எம் தலைகள் மட்டும்..??
தவிப்பு ஒன்றே எமக்கு எந்நாளும் சொந்தம்...!!! 
இளநீர் குடித்தவன் மரமேறி விட்டான்..!
இடையில் வந்து கோம்பையை தூக்கி...
இளிச்சவாயர்களாய்  இன்றும் நாம்....!
இன்னும் எத்தனை காலமோ....???
இருளோடு எம் வாழ்வு 
இரண்டறக்கலந்து விட்டது....!
மின்மினியின் ஒளி கூட..
மிகத்தொலைவிலும் இல்லை...!
கடந்து போன தருணங்கள்...,
கலைந்து போன நினைவுகள்...,
கனவாகிப்போன நிஜங்கள்....,
கண் துடைப்பில் உறவுகள்....,
துடி துடித்து உயிரை விட்டபடி..
துளித்துளியான கண்ணீரோடு மட்டும்..
துருவங்கள் ஆக்கப்பட்ட  உறவுகளாய் நாம்...!!!
உயிருக்கு பயந்து...
உறவுகளை பிரிந்து ஓடோடி வந்தால்,,,
உதைக்கின்றார்களே...
உண்மை தெரியாமல் இங்கும்..!!!
உயிரை கசக்கி பிழிந்து
உலர்த்தி சலவை செய்யும்
உயிர் இயந்திரங்கள்...!!!

உலகத்தை  அறிந்திடா  மானிடங்கள் இவை..!!
உணர்ச்சிகள் உணர்வுகளும் செத்து 
உயிரற்ற உடலங்களாக... 
உலவி  வீரம் காட்டும் இவர்களை விட
உயிர்களை கொல்லும் இலங்கை இராணுவம்
உயர்வானது...!!!
உணர்வுகளை கொன்று,,, 
உறவுகளை பிரிக்கின்ற,,, 
உன்னதமான இராச்சியத்தின் தடுப்பு மையத்தை விடவும் 
உயிர் வதை பூஸா முகாமும் நாலாம் மாடியும்,,
உயர்வானது...!!!
அரசி 

Monday 1 October 2012

காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும் உன் இதயம்...!!!



விழி கொண்டு நோக்கிட முடியா
விதியா இது...?
விழியாவது பேசி ஆற்றுப்படுத்த  முடியா.
விதியா இது...?

உருவம் ஒன்று மட்டும் நிழலாடுகின்றது...!
உன்னை காணும் துடிப்பில் எட்டி எட்டி நோக்கும் என்னை.
உருகும் மனதோடு அங்கும் இங்கும் அந்தரிக்கும்
உன் தவிப்பை காணுகின்ற என் கண்களில் நீரில்லையே,,

இதயம் கனம் தாங்காது வெடித்தாலும்..
இந்த பேதையை தாங்கி கொள்ள அருகில் தானும் - உனக்கு 
இடமளிப்பார்களா ?

உன் மனதை தாங்கி வரும் 
உன் எழுத்துக்கள் நிறைந்த மடலை காண
ஓடோடி வருகின்றேன் மணித்தியால 
ஓட்டங்களை கடக்கும் பேருந்தில் ஏறி..

கருவிலும் இடுப்பிலும் சுமக்கும் மழலைகளின்
சுமையை விட நெஞ்சில் 
சுமக்கும் உன் சுமை அதிகமாய்..
என்னை பற்றிய சுமைகளை 
சுமந்து கொண்டிருக்கும் உன் 
சுமைகளையும் சேர்த்து 
சுமப்பதாலோ ...??

கைமாறி வரும் என் மனது உன்னிடமும், உன் மனது என்னிடமும்
கை சேர்வதற்கிடையில்....
அல்லாடி போய் விடுவேன்
அந்தரத்தில்....

காட்சி கொடுக்கும் முகத்தினை விட 
காட்டாத உன் அகம் தெட்டதெளிவாக தெரிகின்றது..
காட்டும் சைகையில்  புரிகின்ற  உன் வேதனையையும் 
காட்டிக்கொள்ளாமல் தவிக்கும் உன் தவிப்பையும்..
காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும்  உன் இதயம்...!!! 

அர்த்தமற்ற பிரிவுகளும் சிறைகளும் 
அடிக்கடி எம்மை
அரவணைப்பதற்கு நாம் இழைத்த 
அநீதி தான் என்னவோ??
அகதி என்பதை - எமக்கு 
அந்தஸ்தாக 
அளித்தது யார்??
யார் இழைத்த 
அநீதி இது..???

 அரசி

Sunday 17 April 2011

நிலவாய் என் வாழ்வில் உதித்த நிலவனே...!!!



இருளோடு ஒளிந்து

இரும்பு நெஞ்சமது துவண்டு

இடுக்கண் இமயமாய் பெருகி வர..

இதமாய் ஒரு நன்மொழி பேசி,,

இதயத்தை வருடி - மெல்ல

இன்பம் நல்கிய இனியவனே..!!!



நினைப்பை

நிஜமாக்கி - பால்

நிலவாய் என் வாழ்வில் உதித்த

நிலவனே...!!!



பத்தாண்டு உறவாய்

பக்குவமாய் என்னை - உன்

இதயமதில் இருத்திக்கொண்ட

இதயவனே..!!!



உண்மைகள் பல

உணர்த்தப்பட்டும் எனை

உயிராய் தாங்கும் - என்

உயிர் கொண்ட தெய்வமே..!!!



காதல் கணவனே..!!!

காலங்கள் கடந்தாலும்,,

என் நெஞ்சமதில் உன்னை இருத்தி,,

என்றென்றும் பூஜிப்பேன்

என் இறையாக......

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....!!!! 


அரசி 

Tuesday 15 June 2010

சிரித்து பரந்து நிமிர்ந்த எம் வானம்,, சிறுகித்தலை குனிகின்றது இன்று..

தமிழீழத்தேசமதின் உயிர் நாடி - எங்கள்

தங்க நகரம் கிளிநொச்சி

தரங்கெட்ட சிங்களவனின் கையில்...



முற்று முழுதாய் புத்தனின் தேசமாய்

மூழ்கிக்கொண்டிருக்கின்றது எம் கலாச்சார நகரம்



சிங்களவனின் சீர்கேட்ட செயலால்

சினம் கொண்டு எழ வேண்டாமோ..?



சிரிப்பைத்தொலைத்து விட்ட இனம்

சிந்தனையையும் தொலைத்து விட்டதன்றோ..?



சிவப்பு மஞ்சள் கொடியின் பறப்பில்

சிரித்து பரந்து நிமிர்ந்த எம் வானம்

சிறுகித்தலை குனிகின்றது இன்று..

சிங்களக் கலாச்சார கொடிகளின் ஆக்கிரமிப்பால்



வெசாக் கூடுகள் அலங்கரிக்கின்றன

வெந்து போன எம் தேசமதை...



கன்னிகளின் கற்பு

காடையரால் களவாடப்படுவதும்,

கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் மனிதப் புதைகுழிகளும்

கபாலமும் எலும்புக்கூடுகளுமாய்..

மயானங்கள் கூட தோற்று விடும் தேசமாக - மெல்ல

மரணித்து போகின்றது எம் தேசம்...



கண்முன்னே மண் காணாமல் போவதை

கண்டும் கேட்டும் இருந்து - இரத்தக்

கண்ணீர் வடிப்பதை தவிர

வேறென்ன முடியும் எம்மால்..?



சிங்கம் சிம்மாசனத்திலே கொடுங்கோலோச்ச

சிறு நரிக் கூட்டங்கள் மானங்கெட்டு சாமரை வீச..

இதயம் ஏங்குகின்றது...!!