Search This Blog

Thursday 24 April 2014

தடை..!!!


படை திரட்டி உலகை சாட்சியாக்கி கொன்றொழித்தார்கள்
மடை திறந்து ஓடிய தமிழ் உதிரம் உறிஞ்சிக்குடித்தார்கள்......!

தடை செய்து தூக்கிலிட அதிகாரம் யாருக்கும் இல்லை...!
அடை மழையாக எங்கள் உறவுகள் கண்ணீரை சொரிந்தார்கள்...!
துடை த்துப்போட நாதியின்றி அநாதரவாய்
இடை நடுவில் நிர்க்கதியானார்கள - இன்றும்
விடை தெரியாத வினாக்களை கால எல்லையின்றி சுமக்கின்றார்கள்..!

தடை இன்றி யாவருக்கும் உயிரை ஈய்ந்திடும்  தாராள மனம் கொண்ட
கொடை வள்ளல்கள் என்று கெளரவிக்க தான் யாருக்கும் மனமில்லை...!

தடை  விதிக்கின்றார்களாம் மரணித்தவர்களுக்கும்...!
எடை போட்டு பார்க்கின்றார்களோ போனவர்கள் வரக்கூடும் என்று..

வடை சுட்ட  பாட்டியின் கதை சொல்லி கரைந்த காகத்தின் வாயில்
வடையினை மீண்டும்  சுட்டுக்கொண்டதாக எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவார்களோ?

கடை வாய் பல்லில் உதிரம் காய்ந்து கிடக்கின்றதை மறைத்து  - வேஷமிட்டு
நடை பயிலும் நரிக்கூட்டத்தின் தந்திரம் அறிந்தும்
குடை பிடிக்கும் உலகமே....!


தனி நபருக்கும் தடை விதிக்கின்றார்கள்
தமிழ் அமைப்புக்களுக்கும் தடை விதிக்கின்றார்கள்...!
தலை கவிழ்ந்து கொண்டு ஆமோதிக்கின்றீர்களா??

தங்கு தடையின்றி கொன்று போட்டவர்களுக்கு என்ன
தடை கொடுப்பீர்கள்...?

உயிர் குடிக்கும் ஆயுதம் உண்டென்று தடை விதித்து
உலகமே ஒன்றிணைந்து போராடி கொன்று போடுகின்றீர்கள்...!

அணுகுண்டு என்கின்றீர்கள் எச்சரிக்கை செய்கின்றீர்கள்
அட சும்மா சும்மா தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் என்று
அவ்வப்போது பீதியைக்கிளப்புகின்றீர்கள்..!
அப்பாவிகள் இலட்சக்கணக்கில் செத்து மடிந்த
தேசம் ஒன்று உண்டு நீங்கள் அறிந்ததுண்டோ...?

 நச்சுக்குண்டுகளை , விச வாயுக்களை வீசி
மயானம் ஆக்கிப்போன எங்கள் மண்ணில்
புதைந்து போனவர்களின் எண்ணிக்கை அறிவீர்களா?


எலும்புகள் பிறப்பெடுக்கும்மனிதப் புதைகுழிக்கு தடை விதியுங்கள்..!
எங்கள் உறவுகள் தினம் தினம்  கைதாவதை தடை செய்யுங்கள்...!
எங்கே எங்கே என்று தேடப்படும் காணாமல் போகின்றவர்களின்
தொடர்கதையினை தடை செய்யுங்கள்..!

உயிர்வதை பூசாவினை முதலில் தடை செய்யுங்கள்...!
உலகமே முடிந்தால் இதில் ஒன்றினையாவது தடை செய்..
உன்னால் முடியுமா???

உலகத்தினையே பயங்கரவாதிப்பட்டம் சூட்டி தடை செய்யும்
உரிமை அவர்களுக்கு உண்டென்பதை மறந்திடாதே...!


No comments:

Post a Comment